"நன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்"

நுழைவாயில்

கதை
  நியாயங்கள்
  சூப்பர் ஹிட் வெள்ளி
  வாக்குமூலங்கள்
  சுண்ணாம்பு
  பூவும் வேரும்
கவிதை
  பாசக்கடல்
  விதி
  சுடர்க தமிழ்நெஞ்சம்
  மூன்றாம் காதல்
கட்டுரை
  பாபருக்கும், இராமருக்கும்...
 அனிச்ச மலர்
நேர்க்காணல்
  க்ருஷாங்கினி
நட்சத்திர ஆல்பம்
திரையோவியம்
காலண்டர் 2006
Difficulty reading Tamil Text?
எங்களுடன் தொடர்புகளுக்கு...
தமிழில் சுலபமாக எழுத! 
யுனிகோட் தமிழில் தட்டச்சு செய்ய

 

வாக்குமூலங்கள்

வண்ணை தெய்வம்

இது ஆனந்தியின் வாக்குமூலம் VannaiTheivam

'பெண்ணாகப் பிறந்துவிட்டால் வாழ்க்கையில் எத்தனை மேடு, பள்ளங்களை சந்திக்க வேண்டியிருக்கின்றது?

எவ்வளவு எச்சரிக்கையாக வாழ்க்கையை திட்டம்போட்டு அமைத்தும்! நானாகவே ஆழக்குழியில் வீழ்ந்துவிட்டேனே! என்போன்ற படித்த பெண்களுக்கே இந்த அடிமை விலங்கை உடைக்க முடியாமல் இருக்கும்போது பாமரமான பெண்களின் நிலை எப்படியாக இருக்கும்? இப்படி மனம் நொந்துகொண்டாள் ஆனந்தி.

'பெண்களாகப் பிறந்தாலே கல்யாணம். குடும்பம். இவையெல்லாம் இயல்பானவைதான். ஆனால் அந்த குடும்பவாழ்க்கையில் இடம்பெறும் சம்பவங்களுக்கு தலைமைத் தாங்குபவளாக பெண்களை நடிக்க வைக்கின்றார்கள்! குடும்பத்தை கட்டியாள்பவர்கள் ஆண்கள்தானே? பழியைச் சுமப்பவள் ஏன் பெண்ணாக இருக்கவேண்டும்? அவளுக்கென்று தனியான விருப்பு. வெறுப்புக்களே இருக்கக் கூடாதா? வீட்டில் என்ன சமைக்கவேண்டும்! நான் எப்படியான உடைகளை அணியவேண்டும்! யார் யாருடன் பழகவேண்டும்! எத்தனை பிள்ளைகள் பெறவேண்டும்! இப்படி பெண்களின் செயல்பாடுகள் எல்லாவற்றையுமே ஆண்கள்தானே தீர்மானிக்கின்றார்கள். எங்களுக்கு ஏன் குடும்பத் தலைவியென்ற பட்டப்பெயர்? கட்டுப்பாடு என்ற பெயரில் ஏன் இந்த அடிமை வாழ்க்கை?" தனிமை கிடைக்கின்றபோதெல்லாம் இப்படியாக தனக்குள்ளேயே குமுறிக்கொள்வாள் ஆனந்தி.

ஆமாம்! இவையெல்லாம் கணவனோடு பேசித் தீர்த்துக் கொள்ள முடியாது? அப்படிக் கதைக்க முற்பட்டால்! தேவையில்லாத விவாதங்கள் பிறக்கும்! சின்னச்சின்னப் பிரச்சனைகளைக்கூட பெரிதாக ஊதி வெடிக்க வைத்துவிடுவார்கள். வாய்க்காரி, அடங்காப்பிடாரி, இப்படியான பட்டங்களை சுமத்துவார்கள். என்பதனால் தனக்கேற்படும் அவமானங்களை தனக்குள்ளேயே அடக்கிக்கொள்வாள் ஆனந்தி.

 'இப்பொழுதுதான் எனக்கு அடிமைவாழ்வில் இருந்து விடுதலை கிடைத்திருக்கின்றது" என்று திருமணத் தினத்தன்று நினைததுக் கொண்டாள்.

வீட்டில் மூன்று ஆண் சகோதரங்களுக்கு மூத்தவளாகப் பிறந்தவள். ஆண் பிள்ளைகளுக்கு கிடைக்கும் மரியாதை முழுமையாக தனக்கு கிடைக்கவில்லையென்றே ஆனந்தி எண்ணிக்கொண்டாள். அப்படி அவள் எண்ணிக்கொள்ளும்படியாகவே வீட்டில் பல சம்பவங்கள் நடைபெறுவதை கண்கூடாகக் கண்டவள்.

வீட்டில் தனது தாயார் செய்யும் உழைப்புக்கும, படும் கஷ்ட்டங்களுக்கும். தாய்க்கு என்ன மரியாதை கிடைத்திருக்கின்றது?

விபரம் தெரியாத சின்னவயதில் ஆனந்திக்கு எந்தக்கட்டுப்பாடும் இருக்கவில்லை. பத்த வயதிற்கு மேலாகும்போது சின்னச் சின்னக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவளுக்கும் அப்பொழுதான் கொஞ்சம் விபரம் புரிய ஆரம்பித்தது. அம்மாதான் வீட்டு வேலைகளையெல்லாம் விழுந்து விழுந்து செய்கின்றாள்! காலையிலே எழுந்து மாட்டுத்தொழுவம் துப்பரவாக்குவது, பால் கறப்பது விற்பது, மாட்டுச்சாணியை விற்று காசாக்குவது எல்லாம் அம்மாதான்.! வீட்டிற்கு அம்மாதான் எசமான் என்றே ஆனந்தி எண்ணிக்கொள்வாள்.

அம்மா அதிகாலையில் எழுந்து இந்த வேலைகளை செய்வதோடு பாடசாலைக்குப்போகும் எங்களுக்கும் வேலைக்குப்போகும் அப்பாவிற்கும் சுடச்சுட காலைச்சாப்பாடுகள் செய்து கொடுக்கவேண்டும். கொஞ்சம் தாமதமானாலும் அப்பா தனது கோபத்தை பேப்பர் புத்தகங்களில் காட்ட ஆரம்ித்துவிடுவார்! சிலசமயங்களில் நேரடியாகவே அம்மாவிற்கு அர்ச்சனைகள் விழும். அனேகமாக அர்ச்சனைகள் விழும்படியாக அம்மா நடந்துகொள்வதில்லை. அடிமையாக இருந்தாலும் முதலாளியிடம் நல்லபெயர் எடுக்கத்தானே எவரும் விரும்புவார்கள்! அம்மாவும் அந்த ரகம்தான்.

தாத்தாவும் பாட்டியும்கூட தங்களுக்கு செய்யும் சேவையில் சின்னப்பிழை விட்டாலும்கூட இல்லாத காரணங்களுக்காக தங்களுக்குள் வாக்குவாதப்பட்டு தங்கள் கோபத்தை வெளிப்படுத்திக்கொள்வார்கள்!

இவ்வளவு பேருக்கும் சம்பளம் இல்லாமல் உழைக்கும் அம்மா தான் உண்பது இரவுச்சாப்பாட்டில் மீதமிருந்த பழையவைகளைத்தான்!

 அதற்குப்பின் பாத்திரம் கழுவுதல் எல்லோருடைய ஊத்தை உடுப்புக்களையும் துவைத்தல், மதியச்சாப்பாடு தயாரித்தல், சாப்பாட்டிற்குப்பின் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் நேரத்தில் இரவுச் சாப்பாட்டிற்காக மாவு இடித்தல், மாவு அவித்தல் பின் மாலையாகிவிட பழையபடி மாட்டடி வேலைகள். அதன்பின் இரவுச்சமையல். இப்படி நாளுக்கு பதினாறு மணி நேரங்;களுக்கு மேல் உழைக்கும் கடுமையான உழைப்பாளி அம்மா.

இரவு நேரங்களில் அப்பாவிடம் கடுகடுப்பு, சிடுசிடுப்பு, எதுவும் இருக்காது! எல்லோரும் சாப்பிட்டு முடிந்தபின் மீதியிருப்பவையில் தான் சாப்பிட்பின் அடுப்படியை துப்பரவு செய்து சமையல் பாத்திரங்களோடு அம்மா சண்டைபோடும்போது அப்பா மிகவும் பரிவாக 'அன்னம் பகல் முழுக்க குசினீக்கை அடுப்படியில் கிடந்து கஷ்ட்டப்படுகிறாய.; இதுகளையெல்லாம் இப்பவே கழுவவேணுமோ? வைச்சிட்டு வந்து படப்பா நாளைக்கு கழுவலாம்". அப்பொழுது மட்டும் அப்பா அன்னம்மாவென்ற அம்மாவின் பெயரை அன்னம் என்று பாசம் வழியக்கூப்பிடுவார்.

'காலமையும் நான்தானே கழுவவேண்டும்?" என்னும் அம்மாவின் நியாயமான கேள்வி அப்பாவின் மாயஜால வார்த்தைகளில் அடிபட்டுப்போகும்.

அந்த நேரத்தில் அம்மா மீது, அப்பா காட்டும் பரிவு அம்மாவிற்கு வீட்டில் பெரிய மரியாதை இருப்பது போன்ற தோற்றத்தையே ஆனந்திக்கு கொடுத்தது. பின்னாளில் விபரம் புரிந்தநாளில் தெரிந்துகொண்டாள். முட்டைகளை அடைகாக்வைத்து பொரித்த குஞ்சுகளை காகத்திற்கும் பருந்திற்கும் இரைகொடுக்காமல் மனிதர்கள் பாதுகாத்து வளர்ப்பது பின்னாளில் தங்களுக்கு உணவாக்கிக் கொள்வதற்காகத்தான்! என்பதைப்போல இரவு நேரங்களில் அம்மாவின் தேவை அப்பாவிற்கு தேவையாக இருந்தது என்பதையும். அதனால்தான் அந்த நேரங்களில் அப்படியான பாசமான அழைப்புக்கள்! விடிந்தால் பழையகுருடி கதவைத்திறடி கதைதான்.

பெண்களை முழு அடிமையாக்க ஆண்கள் வைத்திருக்கும் மிகச்சிறந்த ஆயுதம் 'கற்பு'. இதைவைத்தே பெண்களை மூலைக்குள் இருத்திவிடுவார்கள்.

சின்னவயதில் சுதந்திரமாக அயல்வீட்டுச் சிறுவர்களுடனெல்லாம் ஆனந்தமாக சுதந்திரமாக விளையாடித்திரிந்த ஆனந்தி பூப்பெய்தியவுடன் மூலைக்குள் குந்தவைக்கப்பட்டாள். முன்னர்போல் ஆண் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாட அவளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பாடசாலைக்குக்கூட பெண்களுடனேயே சேர்ந்து செல்ல வேண்டுமெனவும், அக்கம் பக்கம் பார்க்கக்கூடாது! தேவையில்லாமல் எந்த ஆண்களுடனும் பேச்சுவார்த்தை வைக்கக்கூடாது! இப்படியான பலவிதமான கட்டுப்பாடுகள்.

நாளாக நாளாக தனது உடலின் வளர்ச்சியைப்பார்க்க அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. அவள் முன்பு அணிந்த ஆடைகளெல்லாம் அளவில்லாமல் போய்விட்டது. ஆனந்திக்கு இப்பொழுது புதுவிதமான ஆடைகள் கொடுக்கப்பட்டன. கால் முட்டபாவாடை! வயிறு தெரியாத மேற்சட்டை! மார்புப்பகுதியை மேலுமொருமுறை மறைக்க துண்டுத்தாவணி! இப்படியாக உடைகளிலேயே பலவித மாற்றங்கள்.

பாடசாலையைத்தவிர வேறு எங்கும் தனியே போகமுடியாது. எப்பொழுதாவது கோவில்@ சினிமா என் று போவதானால்! கைதிகளை பொலீஸ் காவலுடன் கொண்டு செல்வதைப்போல அம்மா| பாட்டி| இன்;னும் பலர் காவலுக்கு வருவார்கள்.

 இப்படியான கட்டுப்பாடுகள் எதுவும் தனது ஆண் சகோதரங்களுக்கு இல்லாததால் தான் ஒரு வீட்டுக்கைதி என்றே ஆனந்தியின் மனம் கூறிக்கொள்ளத் தொடங்கியது.

அந்த நேரங்களில் ஆனந்தி எண்ணிக்கொள்வாள் இப்படியான கட்டுப்பாடுகள் எதுவுமில்லாமல் சுதந்திரமாக வாழவேண்டுமானால் இந்த வீட்டைவிட்டு வேளியேறவேண்டும். வீட்டைவிட்டு வெளியேற வேண்டுமானால்! அது திருமணத்திற்குப் பின்னால்தான் முடியும்.

கணவனாக வருபவருபவரும் ஒரு ஆண்தானே? இன்று அம்மா| அப்பா| போடும் கட்டுப்பாடுகளை நாளை கணவராக வரப்போறவரும் போடுவார்தானே? இப்படியான சந்தேகக் கேள்விகள் தோன்றும்போது அதற்கு சமாதானப்பதில்களும் தோன்றும்.

'ஆண்கள் எல்லோரையும் ஒரேமாதிரியாகப் பார்க்கக் கூடாது. பெண்களின் உணர்ச்சிகளை மதிக்கத்தெரிந்த ஆண்களும் இருக்கத்தானே செய்கின்றார்கள். அப்படிப்பட்ட ஒருவரைத்தான் திருமணம் செய்யவேண்டும்" என்பது ஆனந்தியின் எண்ணமாக இருக்கும்.

 சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ஆனந்திக்கு தாய் புத்திமதிகள் கூறுவதுமுண்டு. 'வாழப்போற இடத்திலை அடக்க ஒடுக்கமாய் நடந்து நல்லபேர் எடுக்கவேணும்." என்பாள். ஆனந்தி மனதிற்குள் சிரித்துக்கொள்வாள். 'நல்ல பெண்ணென்றால்? அடங்கி ஒடுங்கி நல்ல அடிமையாக?!"

பாட்டி பழங்கதைகள் எல்லாம் சொல்லும்போது பழமொழிகளும் கூறிக்கொள்வாள். 'பொம்பிளையள் கண்டபாட்டுக்கு பல்லைக் காட்டக்கூடாது| பொம்பிளை சிரிச்சாப்போச்சு புகையிலை விரிச்சாப்போச்சு" என்பது போன்ற பழமொழிகள். பெண்கள் மனம்விட்டுச் சிரிப்பதற்கும் கட்டுப்பாடா? கல்யாணம் பண்ணும் பெண்களுக்கு சொல்லிக்கொடுப்பார்கள் 'கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசனாம்!" கணவன் எப்படியானவனாக இருந்தாலும் பெண்ணானவள் அடங்கிப்போகவேண்டும் என்பதனை இப்படி வேறுவிதமாக சொல்லுகின்றார்கள்.

திருமணம் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நெருங்கிய உறவைத் தேடிக்கொடுத்தபோதும் உறவுக்கும்| மனிதாபிமானத்திற்கும் இடையில் எவ்வளவு வேறுபாடுகள் இருக்கின்றது என்பதனை அனுபவமூலமாக கற்றுக்கொண்டவள் ஆனந்தி.

திருமணமான பெண்களை இல்லாள்| இல்லத்தரசி| என்றெல்லாம் சொல்லிக்கொள்ளும்போது இவை பெண்களை பெருமைப்படுத்தும் வார்த்தைகள் என்றே ஆனந்தியும் முன்னர் எண்ணியதுண்டு. பின்னாளில் சிந்தித்துப்பார்த்தாள் இல்லான் என்று ஆண்களை அழைப்பதில்லையே? ஓகோ! இல்லான் என்றால் ஒன்றும் இல்லாதவன் என்று ஆகிவிடும்! அதனால்த்தான் ஆண்கள் அந்தப் பட்டப்பெயரை தங்களோடு ஒட்டவிடாமல் தவிர்த்துக்கொண்டார்கள் போலும்.

 'பெண்கள் ஒழுக்கம் தவறிவிட்டால் 'வேசி' என்கின்றார்கள். 'தேவடியாள்' என்கின்றார்கள். ஒழுக்கம் தவறும் ஆண்களை யாரும் 'வேசன்' என்றோ 'தேவடியன்'  என்றோ அழைப்பதில்லையே? மாறாக அங்கும் 'வேசி,மகன்' , 'தேவடியாள்,மகன்|' என்றுகூறி பெண்களைத்தானே ஏசிவைக்கின்றார்கள்! குற்றம் செய்பவன் ஆண்! வசைபடுபவள் பெண்ணா? பெண்கள் அவ்வளவு இழக்காரமானவர்களா?" இப்படியான கேள்விகள் எல்லாம் ஆனந்தியை விழிப்படையச் செய்தன.

கலைஞன், மைந்தன், புலவன், இப்படியான சொற்களுக்கெல்லாம் வழமையில் பெண்பாலே இல்லை! இது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்பது ஆனந்தியின் கருத்து.

பெண்ணாகப்பிறந்தால் ஒருவனுக்கு மனைவியாகத்தான் வேண்டும். இருவரும் விரும்பியும்! பெண் விரும்பாதபோதும்! கணவனுக்கு இன்பத்தை கொடுக்கத்தான் வேண்டும். குடும்ப வாழ்க்கையில் குழந்தை பெற்றெடுப்பது தவிர்;க்க முடியாததே. ஆனால் கணவனோ! தனது ஆண்மைக்கு கிடைத்த பரிசுதான் மனைவி பெற்ற பிள்ளை என மார்தட்டிக்கொள்கின்றான்! ஆண்குழந்தையையும் பெண்தான் பெற்றெடுக்கின்றாள். தனது இரத்தத்தை பாலாகக் கொடுத்து தூக்கமின்றி மார்பிலும், தோளிலும் சுமந்து அவனை வளர்த்து விடுகின்றாள். அவனோ தனது காலத்தில் இன்னொரு பெண்ணை ஆதிக்கம் செய்கின்றான். அவளின் உரிமைகளை பறிக்கின்றான். இதனை எந்த ஆண்களாவவது சிந்தித்து பார்க்கின்றார்களா?.

இப்படியான ஆண்களுக்கு மத்தியில் மாறுபட்ட ஒருவனை தான் வேலைசெய்த அலுவலகத்தில் கண்டாள் ஆனந்தி.

அவனது பெயர் செல்வம். பெண்கள் விரும்பக்கூடிய வகையில் அழகாக இருந்தது மட்டுமல்ல! பெண்களை மதித்து மரியாதை கொடுக்கும் பண்பு கொண்டவனாகவும் இருந்ததோடு பெண்களின் உரிமைகளுக்காக வாதாடும் பண்பும் ஆனந்தியைக் கவர்ந்தது.

இப்படியான பண்புகளுக்காக அவளது மனம் அவனை விரும்ப ஆரம்பித்தது. 'நிச்சயமாக செல்வம் தனது எண்ணங்களோடு ஒத்துப் போகக்கூடிய கணவனாக இருப்பான் என்கின்ற எண்ணத்தில் அடிக்கடி அவனோடு மனம் விட்டுக் கதைத்தாள்.

கல்யாணம் என்ற பேச்சு வந்தபோது செல்வம் மறுத்துவிட்டான். காரணம்? 'வயதான பெற்றோர். திருமண வயதில் ஒரு தங்கை. இப்படியான சூழ்நிலையில் தான் மணமுடித்தால்! மனைவியை சந்தோசமாக வைத்திருக்கமுடியாது" என்பது செல்வத்தின் கருத்து.

'குடும்பம் என்றால் இப்படியெல்லாம் இருக்கத்தான் செய்யும். மனைவியாக வருபவள் இவற்றையெல்லாம் சமாளித்துத்தான் போகவேண்டும். அது மாத்திரமல்ல ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, திருமணம்தான் அவர்களுக்கு சமூகத்தில் ஒரு அந்தஸ்த்தை கொடுக்கின்றது. நீங்கள் சொல்வது போன்ற சின்னக் காரணங்களுக்காக மனமொத்த இருவர் திருமணத்தை ஒத்திவைத்தால்? பிற்பாடு மனம் ஒத்துவராத ஒருவரை மணமுடிக்கவேண்டி ஏற்படலாம்! அப்படியான வாழ்க்கை சந்தோஷமாகவா இருக்கும்?" இப்படியான ஆனந்தியின் வாதங்கள் செல்வத்தை மனம்மாற வைத்தது.

இப்படி தான் மனம்விரும்பி தேர்ந்தெடுத்து மணமுடித்த செல்வத்துடன்தான் இனி சேர்ந்து வாழமுடியாது! என்ற நிலைக்கு வந்துவிட்டாள் ஆனந்தி.

தனது ஜந்து வருட குடும்ப வாழ்க்கையில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியபின் ஏன் இந்த மனக்கசப்பு? ஆனந்தி கூறும் காரணங்களும் நியாயமானவையாகவே இருந்தது.
 
'ஆரம்பத்தில் செல்வம் தற்சமயம் திருமணம் வேண்டாம் என்றுதான் சொன்னார். தற்சமயம் வேண்டாமென்றாரே தவிர திருமணமே வேண்டாம் என்று சொல்லவில்லை. திமணமாகாத தன் தங்கை, வயதான பெற்றோர்கள், இவர்களெல்லோரையும் மறந்து தான் திருமணம் செய்ய முடியாது என்றுதான் சொன்னார். எல்லாக்குடும்பத்திலும் மாப்பிள்ளைக்கு பெற்றோர் இருக்கத்தான் செய்வார்கள் அதற்காக திருமணம் செய்யாமலேயே இருந்துவிடுவதா? என்றேன் நான். எனது விருப்பம்போல திருமணம் நடக்கவேண்டும் என்பதற்காக செல்வத்திற்கு சீதணமும் கொடுக்க முன்வந்தார்கள ;எனது பெற்றோர்கள். இது நான் விரும்பாததுதான் ஆனால் செல்வத்தின் தங்கையின் திருமணம் நடைபெறவேண்டுமானால் எனது கொள்கையை தியாகம் செய்யத்தான் வேண்டும் என்று எனது மனம் எனக்கு சமாதானம் கூறியது. அதே நேரம்; செல்வமும் சீதணம் வாங்க விரும்பவில்லை என்பது உண்மைதான். ஆனால் செல்வத்தின் பெற்றோர்களோ சீதணம் வாங்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். எனது அப்பாவும் சொன்னார் 'ஆனந்தி எனக்கு ஒரே மகள் அவளுக்கு கொடுக்கவேண்டியதை நாங்கள் கொடுக்கின்றோம்" என்று முத்தாப்பாய் கதைத்தார். சீதணப்பணம் செல்வத்தின் பெற்றோர்கள் கைக்கு சென்றது. இதனால் செல்வத்தின் தங்கைக்கும் எனக்கும் திருமணம் நடந்தது.

திருமண ஆரம்பகாலம் சந்தோஷமாகத்தான் இருந்தது. திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளை வீட்டோடு போய்விட்டாள் செல்வத்தின் தங்கை. நான் மாப்பிள்ளை வீட்டோடு இருப்பதனால் வீட்டுவேலைகள் எல்லாம் என்னிடம் வந்து சேர்ந்தது. வீட்டுவேலைகளையும் செய்துகொண்டு வேலைக்கும் போய்வருவது கஷ்ட்டமாகவே இருந்தது இருந்தாலும் செய்தேன். வேலையை விட்டுவிடும்படி செல்வம் அடிக்கடி கூறுவார்! வேலையை விட்டுவிட்டால் குடும்பச்செலவை சமாளிக்கமுடியாது என்பது இருவருக்கும் தெரியும். அதுமாத்திரமல்ல இதுவரைகாலமும் நான் உழைத்துச் சாப்பிடுகின்றேன் என்று மனதிற்கு திருப்த்தியாக இருந்தது. வேலையை விட்டுவிட்டால் இன்னொருவர் உழைப்பில் சாப்பிடவேண்டும்! அதை நான் விரும்பவில்லை. அதனால் வேலையை தொடர்ந்தேன்.

செல்வமும் என்னைப்போல எட்டு மணித்தியாலம்தான் வேலை செய்கின்றார். ஆனால் வீட்டு வேலையில் எந்த உதவியும் செய்யமாட்டார்.

திருமணத்திற்கு முன் அவர் கூறிய கருத்துக்களுக்கும் இப்போதைய நடைமுறைகளுக்கும் பெரிய வித்தியாசம் தெரிந்தது. மனைவியென்றால் வீட்டுவேலைகள் செய்யவேண்டியது அவளின் கடமையென எல்லாக் கணவனமார;களைப் போலவே செல்வமும் என்னை ஒரு அடிமையென எண்ண ஆரம்பத்துவிட்டார்.

திருமணம் மூலம் சமூக அந்தஸ்த்து பெறவே எல்லாப் பெண்களும் விரும்புகின்றார்கள்! நானும் அதைத்தான் விரும்பினேன். ஆனால் கிடைத்ததோ அடிமை அந்தஸ்த்துத்தான்!

வீட்டு வேலைகளுடன், மாமன் மாமியின் தேவைகளைக் கவனித்துவிட்டு நான் கந்தோர் வேலைக்குப் போவதற்கு முன்னர் அவர் அணியும் உடுப்புக்களை அழகாக அயன் செய்து வைக்கவேண்டும்! அதைக்கூட அவர் செய்யமாட்டார்! நானும் எவளியில் போகும்போது அழகாகப்போகவேண்டும் என்றே அவர் கூறுவார். நான் அழகாகப்போவது தனக்கு கௌரவம் என்று நினைக்கின்றாரோ? என்னவோ! வேலைவிட்டு வீட்டிற்குவந்தால் அவர் பத்திரிகையும், டிவி யும்தான். பின் படுக்கைக்குப் போகும்போதும் நான் அழகாகவே இருக்கவேண்டும்.

எனது மனநிலை, உடல் களைப்பு இவைகளைப்பற்றி எண்ணுவதே இல்லை. தங்கள் இன்பமே திருப்தியான வாழ்வு என்று எண்ணுகின்றார்கள். எனது உடல் நிலையைக்கூறி தள்ளிப்படுத்தால்! அடுத்தநாள் நான் கொடுக்கும் தேநீரில் இருந்து சாப்பாடுவரை எல்லாவற்றிலும் குறை கண்டுபிடிப்பார்! அது சின்னச் சின்ன சண்டைகளாக மாறும்! சிலவேளைகளில் ஒருவாரம் வரைக்கும் நாங்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளாமல் இருந்ததும் உண்டு.

ஒருவாரத்திற்குப ;பின் அவராகவே சமாதானமாகுவார். எங்கு? கட்டிலில்தான்! ஒருவாரம் லீவில் இருந்துவிட்டு வேலைக்குப் போகும் போது கந்தோரில் எப்படி ஃபைல்கள் குவிந்து இருக்குமோ? அதேபோல அன்று கட்டிலிலும் அப்படித்தான்! பாலியலிலும் பழிவாங்கும் தன்மைதான்! தங்களுக்கு மட்டுமே வீரியம் உண்டு என்ற வீராப்பு.

குழந்தை பெறுவதை தள்ளிவைப்போம் என்றேன்! தங்கள் குடும்பத்திற்கு ஒரு வாரிசு வேண்டுமென்றார். குழந்தையை எப்பொழுது பெற்றுக்கொள்ளலாம் என்று தீர்மானிக்கும் உரிமைகூட எனக்கு இல்லாமல் போய்விட்டது.

மருந்து மாத்திரைகளின் உதவியுடன் அவர்களுக்குத் தெரியாமல் அதைத்தள்ளி வைக்கலாம்! ஆனால் மலட்டுப்பட்டத்தை கட்டிவிடுவார்களே! என்ற காரணத்தால் அவர்கள் விருப்பத்திற்காக எனது வயித்தில் குழந்தையை சுமந்தேன்.

பிறப்பது ஆண் குழந்தையாக இருக்கவேண்டும் என்பது அவர்கள் எல்லோரது விருப்பமும்.

திருமணம் செய்யும்போது அழகான பெண்வேண்டும்! பிறக்கும் குழந்தை மட்டும் ஆணாக இருக்கவேண்டும்! என்ன விந்தையான ஆசைகள்!

என்ன விந்தையோ? அவர்கள் ஆசைப்பட்டபடி ஆண்குழந்தைதான் பிறந்தது! அதிலும் தன்னுடைய பிள்ளையென்று பெருமை பேசிக்கொள்வார்.

பிள்ளை பிறந்தபின் எனது மார்பழகில் கவர்ச்சி குறைந்திருக்கவேண்டும்! சில சமயங்களில் அவர் சிரித்துக்கொண்டே சொல்லுவார் 'பிறைசியர் இல்லாவிட்டால் நான் பாட்டி,தானாம்!" நகைச்சுவைக்காகச் சொன்னாரா? அல்லது பெண்களின் அழகெல்லாம் ஒரு பிள்ளை பெறும்மட்டும்தான் என்று கேலி செய்தாரா?என்று புரிந்துகொள்ளமுடியாமல் இருக்கும். எங்களில் ஏற்படும் மாற்றங்களை கேலிசெய்வதற்கு எசமான்களுக்கு உரிமை இருக்கின்றது போலும்.

பெண்களுக்கு முதுமை விரைவில் வருவதற்கான வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. மாதவிலக்கு, கர்ப்பம், பிரவசம், குழந்தைக்கு பால் கொடுத்தல், ஓயாத வீட்டுவேலை, சமையலறையில் கிடைக்கும் வெப்பம், இவைகளோடு கணவனை சந்தோஷப்படுத்தும் வேலை! ஆண்கள் இவற்றில் இருந்து தப்பிவிடுகின்றார்கள். இதை தெரிந்துகொண்டும் கேலி செய்வார்கள்.

சமையல் பிந்திவிட்டது. சாப்பாடு சூடாகஇல்லை. இப்படியான சின்னக் காரணங்களுக்கெல்லாம் வீட்டில் சண்டைவரும்! அவர்கள் எசமான்கள் உரிமையோடு கேட்கின்றார்கள்! நாங்கள் அடிமைகள்! பணிந்து போகவேண்டும் என்று அவர்கள் எண்ணுகின்றார்கள். என்னை சோதிப்பதற்காகவோ? தெரியாது! பெண்களுடன் வலிந்து@ வலிந்து சிரித்துக்கதைப்பார். நான் யாராவது அவருக்குத் தெரியாத@ எனக்குத் தெரிந்த ஆண்களுடன் கதைத்தால்! வீட்டிற்கு வந்தவுடன் ஆயிரம் கேள்விகள் 'யாரவன்? கூடவே வேலைசெய்பவனென்றால்? ரோட்டில் சிரித்து, சிரித்துக் கதைக்கவேணுமோ?" இப்படியான சந்தேகப்பேச்சுக்கள்.

 கந்தோரில் எவ்வளவு கடுமையான வேலையாக இருந்தாலும் மாலையில் குறித்தநேரத்தில் வீட்டில் நிற்கவேண்டும். வேலை அதிகம்; அல்லது பஸ்சிற்கு காத்திருந்து தாமதமானால் அதற்குரிய காரணத்தை அவர் நம்பும்படியாக சொல்லவேண்டும். அவர் தாமதாக வந்ததைக் கேட்டால்! 'உனக்குத்தான் வீட்டில் நிறைய வேலைகள் இருக்கின்றதே! நான் வந்து உனது வேலைகளை தடுப்பானேன்!" என்பார். இந்தப் பதிலின் அர்த்தமென்ன? நேரத்திற்கு வந்து உனக்கு உதவி செய்ய மாட்டேன்! என்கின்றாரா? அல்லது தன்னுடன் சல்லாபம் செய்வதற்கு எனக்கு நேரமில்லை என்கின்றாரா?

இப்பொழுதெல்லாம் அவரின் தாய்,தந்தையரைக் கவனிப்பதற்கே அதிக நேரம் தேவையாக இருக்கின்றது. எனது சேவையில் சிறு தாமதம் ஏற்பட்டாலும் மகனிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்ல