"நன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்"

 கதை
  பிம்பம்
  மறதி
  சிலந்திவலை
  விடுதலை
கவிதை
  மனிதனை நினைத்தால்...
  புகலிடம் தாராயோ
  தமிழ்நெஞ்சம்
  அப்பாவின் கையெழுத்து
  முத்தான முத்துக்கள்
  கட்டுரை
  கற்பு
  கவிதாயினி மதுமிதா
  தொலைநோக்கு விகடன்
  சிரிக்க சிந்திக்க
  சிந்தித்தால் சிரிப்புவரும்
  சிரிப்பதற்காக அல்ல
  நூல்கள் அறிமுகம்
  நட்சத்திர ஆல்பம் 
  திரையோவியம்
  காலண்டர் 2006
.. Difficulty reading Tamil Text ?
.. Tamil Fonts
.. எங்களுடன் தொடர்புக்ளுக்கு...
.. தமிழில் சுலபமாக எழுத!
.. யுனிகோட் தமிழில் தட்டச்சு ...

சந்தனப்பேழை

01 - 2006

02 - 2006

03 - 2006

04 -2006

 

 

 

பிம்பம்

ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர்

அம்மா, ஏம்மா நான் இவ்வளவு கருப்பா இருக்கேன்? கடந்த இரண்டு ஆண்டுகளில் புவனா இதே கேள்வியைப் பல முறை கேட்டு விட்டாள். தான் சிவப்பாக இல்லையென்று அவளுக்குக் கழுத்து வரை குறை.

ஒரே மகளின் மனம் அவளுக்குக் கண்ணாடியின் பிரதி பிம்பமாகவே தெரிந்திருந்தது. புவனாவின் வயதில் இத்தகைய எண்ணங்கள் தோன்றுவது மிகவும் இயற்கை. பதினைந்து வயதில் தன்னைப் பற்றிய எண்ணங்கள் அதிகம் இளையர்களுக்கு மேலிடுவதும் வந்தனா அறிந்ததே. தன்னை மற்றவர்கள் கவனிக்கிறார்களா, தான் அவர்கள் கண்ணுக்கு எப்படியிருக்கிறோம் மற்றும் சக மாணவிகளை ஒப்பு நோக்கும் போது, தான் பார்க்க எப்படியிருக்கிறோம் என்றெல்லாம் மனதில் ஒடும் தான். வந்தனா இவற்றை யெல்லாம் உணராமலில்லை. ஆனால், சில வேளைகளில் அவளும் பொறுமை யிழப்பதுண்டு. அத்தகைய தருணங்களில் அவள் சட்டென்று தன் கோபத்திற்குக் கடிவாளமிட்டு விடுவாள். புவனாவின் பிடிவாதம் படிப் படியாகக் கூடிக் கட்டுக் கடங்காமல் போகுமே என்று பயந்து விஷயத்தை வளர்த்தாமல் சட்டென்று பேச்சை மாற்றுவாள். இதையுணர்ந்து பிடிவாதமாய் அதையே பேசுவது புவனாவின் புதுப் பழக்கமாகி இருந்தது. முன்னுக்கும் போக விடாமல் பின்னுக்கும் போகவிடாமல் மகள் தொல்லைப் படுத்தும் போது வந்தனா செய்வதறியாது விழிப்பாள்.
 
புவனாவும் விடாமல், "மாமா, சித்தி எல்லாருமே செவப்பா இருக்கும் போது நீங்க மட்டும் ஏம்மா கருப்பா இருக்கீங்க. ஏன்? அப்பாவும் கருப்பா இருக்காரு. அதான் நானும் கருப்பா பிறந்திருக்கேன், இல்ல" என்று புவனா சொன்னதும் வந்தனாவின் கோபமும் வேதனையும் கட்டுக் கடங்காமல் போனது. புவனாவின் முகத்தில் முன்பெல்லாம் இருந்த பரிதாபம் போய் சலிப்பே இப்போது எஞ்சி இருந்தது.
 
"ம், சரி, இப்போ என்ன சொல்ற, ஸ்கூலுக்குப் போக மாட்டேன்னு போன வாரம் மாதிரி அடம் பிடிச்சிக் கிட்டு வீட்டுலேயே இருக்கப் போறீயா? சொல்லு புவனா", வார்த்தைகளில் பொறுமையை வலுவில் வரவழைத்துக் கொண்டு சாதாரணமாகக் கேட்க முயன்றாள். வந்தனா கண்டிக்க முயல்வதற்குள்,  "சரி சரி, விடும்மா. வா புவனா, இன்னிக்கி நானே உன்னை ட்ராப் பண்றேன். நீ ரெடியா? ம் ,வா, போகலாம்", என்று நிலமையை ஒருவாறாக எடை போட்டு, வழக்கம் போல புவனாவின் அப்பா தன் செல்ல மகளை அழைத்துக் கொண்டு நகர்ந்ததும், அப்படியே இருக்கையில் தொப்பென்று உட்கார்ந்தாள்.
 
உயர் நிலைப் பள்ளியில் சேர்ந்ததிலிருந்து படிப் படியாக புவனாவினுள் இந்த 'நிறம்' என்ற அரக்கன் புகுந்து விட்டான். யார் ஒருவரும் தனது தாய் தந்தையைத் தேர்ந்தெடுக்க முடியாததைப் போலவே தனது நிறத்தையும் தேர்ந்தெடுக்கவியலாது. தன்னை விட அதிக உயிரியல் அறிவுள்ள புவனாவிற்கு ஏன் இந்த உண்மை புரியவில்லை என்று தான் வந்தனாவிற்குப் பெரும் புதிராய் இருந்தது. இந்தச் சர்ச்சை பெரும்பாலும் காலை வேளைகளில் தான் எழும். சீருடையை உடுத்திக் கொண்டு கண்ணாடி முன்னால் தலை சீவும் போது புவனா ஆரம்பிப்பாள். கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்ததுமே புவனா தன் அமைதியை இழந்து விடுவாள். அவளுள் ஏதோ துர்தேவதை புகுந்து கொண்டதுவோ என்று தான் வந்தனா எப்போதும் மலைப்பாள். சமீபகாலங்களில் இது போன்று நடக்காமல் இருப்பதே அரிதாகி விட்ட நிலை.
 
பதினைந்து வயதுப் பெண் பள்ளிக்குப் போக மாட்டேனென்று அடம் பிடிப்பதை வெளியில் யாரிடமும் சொன்னால் நம்பக் கூட மாட்டார்கள். நம்பினாலும் ஏளனமாகச் சிரிப்பார்கள். 'நீயே உன்னை வெறுத்தால் மற்றவர்கள் மட்டும் உன்னை மதிப்பார்களா?', என்று எத்தனை முறை கூறினாலும் புவனாவிற்குப் புரியாது.  இறைவனின் படைப்பில் ஒவ்வொரு உயிரும் ஒருவிதம், அத்தகைய வேறுபடுகளே உலகில் ஒரு நடு நிலையையும் அழகையும் கொடுத்துள்ளன என்பதையும் புவனாவே நன்கறிவாள். அவளது பள்ளிக் கட்டுரைகளில் வந்தனா அக்கருத்துக்களைக் கண்டிருக்கிறாள். ஆனால், ஏனோ தனக்கென்று வரும் போது புவனாவின் மனம் உண்மைகளை ஏற்க மறுத்தது.

நண்பர்களுக்கும் அவர்களுடைய அபிப்பிராயங்களுக்குமே புவனா அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருந்தாள். அதிக நெருக்கம் கூட இல்லாத வகுப்புத் தோழனோ தோழியோ கூறும் கருத்துக்கள் புவனாவிற்கு வேதவாக்காயின. இரவு பகலாக அதையே நினைத்து நினைத்துப் பெரும்பாலும் மருகினாள். தன் மகள் மகிழவும் அவர்கள் அவ்வப்போது ஏதேனும் கூற மாட்டார்களா வென்று அப்போதெல்லாம் வந்தனா பாவம், ஏங்கினாள். "அவள் வயது அப்படிம்மா, நாம ரெண்டு பேரும் ரெண்டாம் பட்சமாகிப் போனோம். ஆனா, நீயும் சரிக்குச் சரியா சண்டை போட்டா ஒரு பலனும் இருக்காது. வெறுப்புத் தான் வளரும். அன்பாலயும் பாசத்தாலயும் தான் அவளை உணர வைக்கணும். முள்ளு மேல விழுந்த சேலையைக் கிழியாம எடுக்கணும்னா நாம பொறுமையாத் தான் செயல் படணும்", என்று அந்நாட்களில் மதியம் தொலை பேசியில் வந்தனாவிற்குத் துணைவரின் அறிவுரை வரத் தவறாது.
 
பொறியியலில் முதுகலைப்பட்டம் பெற்றும் கூட வந்தனா வீட்டிலேயே இருப்பது தன் ஒரே குழந்தையான புவனாவிற்காகத் தான். ஆனால் பல சமயங்களில் அவளது அக்கறையை புவனா தவறாகவே புரிந்து கொண்டாள். தன்னை அம்மா தேவைக் கதிகமாகக் கண்காணிப்பதாகவே அவள் எண்ணினாள். இதுவும் அவளது தோழிகளின் கருத்து. எப்போதும் போல தோழிகளின் இக்கருத்தைத் தன் கருத்தாகக் கொண்டாள் புவனா.
புவனாவின் கண்ணோட்டத்தில் அவளது பெற்றோர் அதிலும் குறிப்பாக அவளது அம்மா அவளுக்குச் சுதந்திரமே கொடுப்பதில்லை. மிகவும் பழைய பஞ்சாங்கமாக இருக்கிறார்கள். தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள அவளுக்கு வீட்டில் உடன் பிறந்தவர்களும் யாரும் இல்லை. தன் எண்ண ஓட்டங்களைத் தன் தோழிகள் புரிந்து கொள்கிறார்கள். பெற்றோர் அவளுடைய எல்லா விஷயத்திலும் தலையிடுகிறார்கள். அம்மா ஒவ்வொன்றுக்கும் ஆயிரம் கேள்விகள் கேட்பது அவளுக்கு எரிச்சலைத் தந்தது.

"அம்மா எனக்கு ரொம்ப போர் அடிக்கிது வீட்டுல. உங்களுக்கு ஏம்மா என் நிலமை புரிய மாட்டேங்குது. நான் என் பிரெண்ட்ஸோட வெளியில போன என்னம்மா?" புவனா அடிக்கடி எரிச்சலுடன் கேட்கும் கேள்வி. வெளியில் அவர்களுடன் போகவே வெண்டாமென்று ஒரு நாளும் வந்தனா சொன்னதில்லை. நேரம் காலமில்லாமல் அவர்கள் ஊர் சுற்றுவதை போலத் தானும் சுற்றவேண்டுமென்று அவள் ஆசைப்பட்டால் மட்டுமே கட்டுப்படுத்தவோ கண்டிக்கவோ செய்தாள். 

மகளின் மேல் உயிரையே வைத்திருக்கும் அப்பாவிற்கு புவனாவின் மேல் சில சமயம் கோபமும் வருவதுண்டு. போன ஆண்டு இறுதியில் ஒரு முறை புவனா தன் கூந்தலைக் கட்டையாக வெட்டிக் கொள்ள வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தாள். அதற்கு மட்டும் வந்தனா சம்மதிக்கவில்லை. விஷயம் காதில் விழுந்ததுமே கையை ஓங்கிவிட்டார் தந்தை. சட்டென்று வந்தனா தடுத்திருக்காவிட்டால் புவனா அன்று அடி வாங்கியிருக்க வேண்டியது.  உன்னோட முடி நீளமா இருக்கறதால தான் நீ இன்னும் அதிகம் குள்ளமாகத் தெரியற. "யு மஸ்ட் கட் யுவர் ஹேர் லா’’, என்று சக மாணவனான ஒரு சீனக் குறும்பன் சொல்லி விட்டானாம். அதை அவள் தோழிகளும் ஆமோதித்தனராம். முன்பு தொடக்கப் பள்ளியில் பெருமையாக நினைத்த தன் நீண்ட  கருங் கூந்தலை உடனே புவனா வெட்டத் துடித்தாள். உடை மற்றும் அலங்காரப் பொருள்கள் எதையும் பெற்றோர் தேர்ந்தெடுத்தால் அதை நிராகரிக்கவே துடிக்கும் புவனா சக மாணவர்களின் சொல்லுக்கு அத்தனை மதிப்பு அளித்தாள்!

மூன்று வருடங்களுக்கு முன் புவனா தன் முழுத் திறமையையும் படிப்பில் காட்டிப் பள்ளியின் சிறந்த மாணவிகளுள் ஒருத்தியாகத் தான் திகழ்ந்தாள். படிப்பு மட்டுமே அவள் மனதை நிறைத்திருந்தது. சிந்தனை, பேச்சு, ஈடுபாடு, செயல் மற்றும் கனவுகள் எல்லாவற்றிலுமே அவளுக்குப் 'படிப்பு' தான் என்றிருந்தது. தொடக்கப் பள்ளியிறுதி யாண்டில் சிறப்பாகச் செய்து நல்ல உயர்நிலைப் பள்ளியிலும் சேர்த்தாள். உயர் நிலைப் பள்ளியில் படிப்பில் அவளது கவனம் குறைய ஆரம்பித்தபோது புதுப் பள்ளியின் சூழல் மற்றும் புது விதமான பாடங்கள் தான் காரணம் என்று பெற்றோர் இருவரும் முதலில் நம்பினர். ஆனால், அவளது கவனம் மெள் மெள்ள விலகிக் கல்வி தவிர, மற்ற எல்லாவற்றியிலும் வியாப்பித்த போது தான் சற்று கவலைப் பட ஆரம்பித்தனர். சொன்னால் யாரும் நம்பக்கூட மாட்டார்கள். பாப் இசைப்பாடகி 'பிரிட்னி ஸ்பியர்ஸ'ம் இங்கிலாந்து காற்பந்தாட்ட இளம் நாயகன் 'மைக்கேல் ஓவன்'ம் இணைய வேண்டும், மணமுடிக்கவேண்டும் என்பதே அவளது மாபெரும் கவலையாக இருந்தது. அவ்விருவரும் வெளியில் ஜோடி சேர்ந்துக் கொண்டு சுற்றுவதாய் தினசரிகளில் படித்தபோது போது அவள் உண்ணா விரதமிருந்தாள். மிகவும் நன்றாகப் படிக்கக் கூடிய பெண் இப்படிப் படிக்கும் பருவத்தை வீணடிக்கிறாளே என்று வருந்தினர். ஆனால் அவர்களின் அறிவுரைகள் எல்லாமே விழலுக்கிறைத்த நீராயின. ஆரம்பத்தில் மதிப்பெண்கள் குறைந்த போது அவளிடம் இருந்த கவலை மெள்ளக் குறைந்து இப்போது முற்றிலுமாக விடைபெற்றிருந்தது. கல்வியில் தான் பின் தங்குவதை புவனா இப்போதெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. பெற்றோரின்  கவலை மட்டும் அதிகரித்தது.

அரையாண்டுத் தேர்வில் மதிப்பெண்கள் குறைந்த போது "இங்க பாரு, புவனா, உனக்கு உன்னோட நீண்ட முடி, உன்னோட கருப்பு நிறம் எல்லாமே பெரிய குறையாத் தெரியுதில்ல ,ம் ,.. சொல்லு. நம்ம தோல் நிறத்தை நம்மால மாத்த முடியுமா? முடியாதில்ல, அப்ப நீ  ஒரு சவாலா எடுத்துகிட்டு உழைச்சுப் படிச்சு, எல்லார் கவனத்தையும் ஏன் உன் பக்கம் திருப்பக் கூடாது? நீ அப்படிப் பிரபலம் ஆகலாமே? குறைகளா நீ நினைக்கிறதையெல்லாம் நிறைகளால நீ ஏன் நிரப்பக்கூடாது, யோசி புவனா?" என்று வந்தனா கண்டிப்போடு கூறினாலும் புவனா ஏற்கவில்லை.

"
அம்மாடி, இங்க பாரேன்,..பொறந்ததுலேயிருந்து நமக்குக் கிடைக்கிற ஒவ்வொரு நாளும் நமக்குக் கிடைக்கிற ஒரு வெகுமதி தெரியுமாம்மா. காலத்தின் அருமையறிந்து படிக்கணும்மா. கஷ்டப்பட்டுப் படிச்சா வகுப்புலயே நீ தான் முதலாவதா வருவ? உனக்கு அந்தத் திறமை இருக்கு தெரியுமா? உனக்கு டியூஷன் கூட நான் ஏற்பாடு செய்யிறேன்னு சொன்னேன். நீ தான் வேண்டவே வேண்டாங்கற. இன்னோண்ணு நீ மறக்காம இருக்கணும். ஆயிரம் நண்பர்கள் ஒரு பெற்றோருக்கு ஈடாக மாட்டார்கள். 'பிரெண்ட்ஸ்' எல்லாருமே தேவை தான். னா, உனக்கொண்ணுன்னா துடிக்கறவங்க நாங்க தான். அத்தகைய அக்கறையுள்ள சிந்நேகிதம் அமையாதாப்பான்னு நீ என்னை கேட்கலாம். அமையும், ஆனால் அதுக்கு இன்னும் காலம் இருக்கு. பிற்காலத்துல அப்படி அமையும் போது தான் நீ நட்புக்கு உன் மனசுல முக்கியத்துவமே கொடுக்கணும். அப்போது நீ நண்பர்களோட கருத்தையும் நல்லாவே எடுத்துக்கலாம். ஏன்னா அப்போ தான் நல்ல நட்பை அடையாளம் காணவே உன்னால முடியும். அதுவரை நட்பு இரயில் சிநேகமாத்தான் இருக்கணும்மா" என்று அப்பா செல்லமாகக் கூறினாலும் புவனா அலட்சியம் செய்தாள். 

வந்தனாவின் கண்டிப்பும் சரி, அப்பாவின் செல்லமும் சரி, அவளை அசைக்கவேயில்லை. அவளுள் நட்பிற்கு இருந்த மதிப்பு பாசத்திற்கு இல்லாமல் போனது தான் வேதனை. "அம்மா நீங்க இஞ்சினிரிங் படிச்சி முடிச்சிட்டீங்கல்ல, ம், இப்ப நீங்க என்ன செய்றீங்க? சொல்லுங்கம்மா.  அதே போல நானும் தான் படிச்சி பெரிசா என்னத்தம்மா செய்யப் போறேன்?" என்று ஒரு கேள்வி கேட்டதுமே புவனா அதிர்ச்சியில் வாயடைத்துப்போனாள். இப்போதெல்லாம் புவனா அழுவது கூடக் குறைந்து விட்டது. அவளது போக்கில் மென்மை மறைந்து ஒரு விதமான பிடிவாதமான இறுக்கமும் முரட்டுத் தனமுமே மிஞ்சியிருந்தது. போன வருடம் ஒருமுறை பள்ளியிலிருந்து வந்து அறையி