"நன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்"

 கதை
  பிம்பம்
  மறதி
  சிலந்திவலை
  விடுதலை
கவிதை
  மனிதனை நினைத்தால்...
  புகலிடம் தாராயோ
  தமிழ்நெஞ்சம்
  அப்பாவின் கையெழுத்து
  முத்தான முத்துக்கள்
  கட்டுரை
  கற்பு
  கவிதாயினி மதுமிதா
  தொலைநோக்கு விகடன்
  சிரிக்க சிந்திக்க
  சிந்தித்தால் சிரிப்புவரும்
  சிரிப்பதற்காக அல்ல
  நூல்கள் அறிமுகம்
  நட்சத்திர ஆல்பம் 
  திரையோவியம்
  காலண்டர் 2006
.. Difficulty reading Tamil Text ?
.. Tamil Fonts
.. எங்களுடன் தொடர்புக்ளுக்கு...
.. தமிழில் சுலபமாக எழுத!
.. யுனிகோட் தமிழில் தட்டச்சு ...

சந்தனப்பேழை

01 - 2006

02 - 2006

03 - 2006

04 -2006

 

 

 
சிலந்தி வலை

- மாலிக்

யாரோ பெயர் சொல்லி அழைப்பது தெரிந்தது. அவசரமாகக் காரை நோக்கிச் சென்று கொண்டிருந்தவன் குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினேன். தெரிந்தவர்கள் ஒருவரும் தென்படவில்லை.

"ஏய் செல்வா" மீண்டும் என்னைக் கூப்பிடும் குரல் சாலையைக் கடந்து சென்று கொண்டிருந்த துபாய் நகர வாகனங்களின் இரைச்சலுடன், வீதியோர கடைகளில் வாடிக்கையாளர்கள் பேரம் பேசும் ஏகமான மொழிகளின் கலகலப்பான சப்தங்களுக்கிடையே தனியாக, தெள்ளத் தெளிவாகவே கேட்டது. கூர்ந்து நோக்கினேன். எதிர் திசையிலிருந்து இளமையைச் சற்றே கடந்தவன் ஒருவன் கைகளை அசைத்தவாறு வந்து கொண்டிருந்தான்.

"செல்லா எப்படிடா இருக்கே?" நெருங்கி வந்து கைகளைப் பற்றிக் கொண்டு விசாரித்தவன் அறிமுகமானவனாகத் தெரியவில்லை என்னிடம் இவ்வளவு உரிமையோடு உறவாடுபவன் யாராக இருக்க முடியும்? மண்டை குழம்பியும் மூளைக்கு எட்டவில்லை.

"அடையாளம் தெரியலையா? ரொம்ப வருஷமாச்சுல்ல. அதான் மறந்துட்ட!" சிரித்தான். எனது சப்த நாடியும் அடங்கிப் போனது. வரிசை மாறாத அதே வெண் பற்கள்! கவர்ச்சியான அதே புன்சிரிப்பு! நம்ப முடியவில்லை! நான் நினைப்பது தவறு. நிச்சயம் அவனாக இருக்க முடியாது. சந்தேகத்தோடு நோக்கினேன்.

"குமரன்..! ஞாபகம் வருகின்றதா செல்வா?" எனது சந்தேகம் பொய்க்கவில்லை. குமரனா? எவ்வளவு வேற்றுமை? நம்ப முடியவில்லை! ஆரத்தழுவி அவனது கரங்களை அன்போடு பற்றிய எனக்கு ஓர் அதிர்ச்சி! என்னோடு கல்லூரியில் பயின்ற மூன்று ஆண்டுகளில் குமரனின் மெலிந்த கைகளைத் தொட்டுப் பார்த்து மகிழ்வதில் அனைவருக்கும் ஒரு மன கிளர்ச்சி. பூப் போன்ற இளம் பெண்ணின் மிருதுவான கைகளை வருடுவது போன்று இருக்கும்! என்ன மாற்றம்? காய்ந்து போய்க் கடினமாயிருந்த அவனது முரட்டுக் கரங்களை பிடித்ததில் இப்போது எனது உள்ளங்கைகள் சிறாய்த்துப் போயின! அவனது கரங்கள் ஏன் இப்படி இற்றுப் போனது? முகம் சிறுத்து கறுத்து, முடிகள் உதிர்ந்து நரைத்து அடையாளம் தெரியாமல் இந்த வயதிலேயே இவ்வாறு உருக்குலைந்து போய் விட்டானே?

வருத்தமாயிருந்தாலும் கசங்கி கந்தலாயிருந்த ஆடையும், அவன் உடலில் வீசிய வியர்வை வாடையும் என்னை அதிக நேரம் அவனோடு ஒன்ற விடவில்லை. சற்று இடைவெளி விட்டு ஒருவாறு என்னை விடுவித்து கொண்டபோது என் உணர்வுகளை தாக்கி உள்ளத்தில் என்றோ உறைந்து போன சம்பவம் மனதில் சலனத்தை ஏற்படுத்த என் அகமும் முகமும் இப்போது மகிழ்ச்சியில் மலர்ந்தது! அவனை அவலமான கோலத்தில் காண்பதை எண்ணி என் இதயம் வெற்றி முழக்கமிட்டது.

"உங்கள இங்க சந்திப் பேன்னு கனவிலும் நினக்கல செல்வா" நான் அணிந்திருந்த விலை உயர்ந்த சூட்டும் அதில் பரவியிருந்த 'சேனல்' நறுமணமும் எனது வாழ்க்கைத் தரத்தை அவனுக்கு உணர்த்தியிருக்க வேண்டும். மரியாதையாக பேசத் துவங்கினான். கூனிக்குறுகி நின்று அவன் எனக்கு தரும் மரியாதையை கண்டு எனது உள்ளம் திளைத்தது! வாழ்ந்தால் கவிதாவோடுதான் வாழ வேண்டும் என்று தினந்தோறும் இனிய கனா கண்டு வந்த என்னை இலவு காத்த கிளி யாய் காக்க வைத்து என இன்பத்தை அன்று கொள்ளையடித்த குமரன் இன்று துன்பத்தில் துவளுகின்றான்! எனது இறுமாப்பு கொக்கரித்தது! அவளது மயக்கும் விழிகளை, பொன்மேனி அழகை, கவர்ச்சியான பருவ வனப்பை, மெல்லிய உதடுகள் நெளிய முத்து பற்கள் உதிர்த்த சிரிப்பை ரசித்தவனாயிற்றே நான்? அவளைப் பற்றி நிறைய கேட்க வேண்டும் என்றிருந்தது.

நாள்தோறும் விதவிதமான காரில் வலம் வந்தும், பணத்தை வீணாக விரயமாக்கியும், கல்லூரி தேர்தல்களில் வெற்றிவாகை சூடியும் என்னை ஏற்காத கவிதா என்னோடு வசதியில், அழகில் குறைந்த குமரனையே விரும்பினாள். என் காசை விட அவன் காதலே அவ சியம், என் ஆசையைவிட அவன் அன்பே அதிகம். என் புகழைவிட அவன் பாசமே ஆழம் என்று சொல்லி விட்டாள்! அப்படி வாய்த்த அழகு சிலையை அனுதினமும் அலங்கரித்து அனுபவிக்காமல் பாவை அவளைப் பிரிந்து பாதியில் வந்து விட் டானே பாவி என்று உள்ளம் குமுறியது.

"நீ எப்படா துபாய் வந்தே? நான் இங்கிருப்பது தெரியுமா?" அவன் கௌரவமாகப் பேசினாலும் அவனை விட மேலானவன் என்ற எனது அகங்காரமும், அகந்தையும் மதிப்பு கொடுக்க விட வில்லை.

"மூணு வருஷமாச்சு, ஜெபல் அலில வேலை. நீங்களும் இங்க இருப்பது தெரியாம போச்சே!"

"என்ன பத்தி கேள்வி பட்ட தில்லையா? சோ மச் சர்பிரைசிங்! பேப்பர் பார்ப்பது கிடையாதா? அடிக்கடி என் போட்டோ வருமே? தமிழ்ச்சங்கத் தலைவர், என். ஆர். ஐய் அசோசியேஷன் வைஸ் பிரசிடென்ட், இன்டியன் கல்சுரல் கிளப் செகரட்டரி என்று நான் பெரிய வி.ஜ.பி.ஆச்சே? எப்படி உனக்கு தெரியாம போச்சு?"

"என்னோட நெலயில வேலைய  விட்டா பேப்பர் பார்க்கவோ வேற பேசவோ நேரம் எங்கிருக்கு செல்வா?"

"பாவம், சரியா மாட்டிட்ட போலிருக்கே! கல்யாணம் ஆயி குடும்பம்..." கவிதாவை இவன் மணந்தது தெரியாது போலவும் மாணவ பருவ நிகழ்ச்சிகள் நினைவில்லாததாகவும் அவனிடம் காட்டிக் கொண்டேன்.

"பி.ஏ. முடிஞ்சதுமேதான் கவி தாவும் நானும் கல்யாணம் பண்ணிக் கொண்டோமே நினைவில்லையா? நானே பர்சனலா இன்விடேஷன் கொடுத்தும் நீங்க வரல! நம்ம கிளாஸ் மேட்ஸ் ரொம்ப பேர் வந்திருந்தாங்க"

"வைஃப் துபைலதான் இருக் காங்களா?" ஜபல் அலியில் சாதாரண வேல செய்பவர்கள் யாரும் குடும்பத்தோடு இருக்க முடியாது என்பது எனக்குத் தெரிந்ததுதான். இருந்தாலும் அவன் வாயைக் கிண்டினேன்.

"நான் உங்கள போல மேல் படிப்பு படிச்சவனா? சாதாரண லேபர்தானே. குடும்பத்தை வச்சுக்க முடியுமா?"

"காதலித்து கல்யாணம் பண் ணிட்டா பத்தாதுடா. கட்டினவள கூட வச்சு காப்பாத்த முடியுமான்னு பாக்கனும். நீ இங்கேயும், அவங்க அங்கேயும் பிரிஞ்சிருக்கறது என்னடா லைஃப்? வருவதை வச்சு நிறைவா இருக்க வேண்டியது தானே? ஏன் காசுக்காக இப்படி லேபரா வந்து கஷ்டப் படனும்? நீங்கள்ளாம் இப்படி வந்து மதிப்பா இருக்கிற எங்க பிரஸ்டீஜை கெடுத்திடுறீங்களே?" கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுத்த கதையாகியதே கவிதாவின் வாழ்க்கை என்ற வருத்தமும் அறைகுறை அறிவோடு இவனைப் போன்றவர்கள் துபாய் வந்து சொற்ப சம்பளத்தில் அவலமான அலுவலை செய்து தம்மையும், தமிழகத்தின் தராதரத்தையும் தரைமட்டமாக்கி விடுகின் றார்களே என்ற வெறுப்பும் வேதனையும் என்னை ஆவேசபட வைத்தது.

"நாங்களும் சீரியசா டிஸ்கஸ் பண்ணி, நல்லது கெட்டதை பாத்துத்தான் கல்யாண முடிவுக்கு வந்தோம். என்ன இருந்தாலும் இறைவனோட நாட்டம்னு இருக்கே, மனுஷன் என்ன செய்ய முடியும்? நாலு வருஷம் முன்னால கவிதாவிற்கு மூச்சடைப்பு வந்தது. டெஸ்ட் பண்ணி இதயத்தில் இருந்த ஓட்டைக்காக  ஆபரேஷன் செஞ்சோம். மூணுவரை செலவாயிடுச்சு. கடனாளியாயிட்டேன்! இருந்த சொத்தையெல்லாம் வித்துக் கூடக் கடன் அடைபடாம ஓவர் டைம், பார்ட்டைம்ன்னு வேலை பாத்து அடச்சிட்டிருந்தப்ப வேறு ஒரு பிரச்சனை உண்டாயிடுச்சு. அவளோட ரெண்டு கிட்னியும் பெயிலாயி வாரம் ரெண்டு முறை டயர்லிஸ் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. எவ்வளவு செலவாகும்னு உங்களுக்குத்தான் தெரியுமே? நான் செஞ்சு வந்த புரூப் ரீடர் சம்பளம் பத்தாமதான் லேபர் வேலன்னாலும் பரவாயில்லேன்னு இங்க வந்துட்டேன். என்ன நம்பி வீட்டை விட்டு வந்தவளைக் காக்க வேண்டியது என் கடமையாச்சே! என்ன செய்யரது சொல்லுங்க? கஷ்டப்பட்டு சேர்கிறதை அனுப்பி அவளுக்கு வைத்தியம் செஞ்சது போக கொஞ்ச சேமிப்பும் இருக்கு. டிரான்ஸ்பிளான்ட் பண்ணிட்டா போதும். நல்லாயிடுவா! எங்களுக்காக ஆண்டவனை வேண்டிக்கிங்க"

குமரன் முகம் கருத்து விட்டதற்கு இப்படி ஒரு காரணம் இருக்கும், அவன் அணிந்துள்ள அழுக்கு ஆடைக்கு ஒரு அர்த்தமிருக்கும் என்று எண்ணவில்லை. ஒவ்வொருவர் வாழ்விலும் சிக்கலான ஏதோ ஒருவித சிலந்தி வலை! என் மேல்மட்ட வாழ்க்கையில் இவர்களைச் சுற்றி பின்னப் பட்டுள்ள பிரச்சனை வலைகள் பெரிதாகப் படுவதில்லை. கவிதாவை நானே கைப் பிடித்திருந்தால் கூட இவனைப் போன்று இவ்வளவு உயரிய தியாகத்தை செய்ய உறுதியாக என் சுயநலம் இடம் தந்தி ருக்காது. என் கண்களில் நீர் கசிய அவனை ஆறத் தழுவி தட்டிக் கொடுத்து "குமரன் என்ன மன்னிச்சுடுங்க, யூ ஹேவ் டன் ரியலி எ கிரேட் சேக்ரிபைஃஸ்! மே காட் பிளஸ் போத் ஆஃப்யூ!!" என்று உளமாற வாழ்த்தியபோது என்னை அறியாமலே என் மனசாட்சி அவனுக்கு மதிப்பு கொடுத்தது.

Copyright © 2006 TamilNenjam.com All right reserved
Best viewed IE 4 and above. Netscape 7.x, FireFox 0.8 and above.with resolutions 800x600 and above