|
|
|
அனுபவம் புதுமை |
|
|
|
ஸ்டீபன் லீகாக்
என்பவர் நகைச்சுவை கதைகள், கட்டுரைகள் எழுதுபவர்.
இவர் நேரத்தை வீணாக்காமல் எப்பொழுதும் எழுதிக்
கொண்டே இருப்பார். சின்னச் சின்ன வீட்டு வேலைகளைக்
கூட ஒரு நாளும் செய்தது கிடையாது.
ஒருநாள் காலையில் இவருடைய மனைவி, உடல் நலம்
சரியில்லையென்று படுத்துவிட்டார். மனைவிக்கு
உடம்பு சரியில்லை. இன்று ஒரு நாள் மட்டுமாவது
மனைவிக்கு உதவி செய்யலாம் என்று லீகாக் மனைவியிடம்
சென்று "உனக்கு ஏதேனும் சாப்பிட வேண்டுமா?"
என்றார்.
அவர் மனைவியும், "ஆம்! ஒரு டம்ளர் டீ வேண்டும்"
என்றார்.
"சரி... நான் உடனே தயார் செய்கிறேன்" என்று லீகாக்
சமையல் அறையில் நுழைந்தார்.
பத்து நிமிடம் கழித்து, "டீ ரெடியா?" என்று மனைவி
கேட்க,
"இல்லை, இப்போதுதான் பால் சூடு செய்கிறேன்"
என்றார்.
மீண்டும் பத்து நிமிடம் கழித்து, "என்ன டீ ரெடியா?"
என்று மனைவி கேட்க,
"இல்லை, இப்பொழுது தண்ணீர் சூடு செய்கிறேன்"
என்றார்.
மீண்டும் பத்து நிமிடம் கழித்து, "என்னங்க டீ
தயார் பண்ணிட்டீங்களா?" என்றார். மனைவி.
"எல்லாம் தயார். ஆனால், டீ தூள் மட்டும் இல்லை"
என்றார் லீகாக்.
"என்னது டீ தூள் இல்லையா?" என்று மனைவி கேட்க,
"ஆமாம். நான் சமையல் அறையில் அனைத்து இடத்திலும்
தேடிப் பார்த்து விட்டேன்" என்றார் லீகாக்.
"ஐயோ ஸ்டவுக்கு பக்கம் கடைசி டப்பாவில் டீ தூள்
இருக்கு. நன்றாக பாருங்கள்" என்றார் மனைவி.
லீகாக்கும் வலது பக்கமாக உப்பு என்று எழுதி
ஒட்டப்பட்டிருந்த டப்பாவை எடுத்துப் பார்த்தார்.
அதில் டீ தூள் இருந்தது. அவர் அந்த டப்பாவை
எடுத்துக் கொண்டு மனைவியிடம் வந்து, "என்ன நீ? டீ
தூள் என்று எழுதாமல் உப்பு என்று எழுதி
இருக்கிறாய்?" என்றார்.
"எனக்கு உப்புக்கும், டீ தூளுக்கும் வித்தியாசம்
தெரியும். ஆனால், டீ தூள் என்றால் ‘உப்பு’ என்றே
எழுதிப் பழக்கப்படுத்திக் கொண்டேன். அதனால்தான்
அப்படி எழுதினேன்" என்றாள்.
"இப்படி கூட புரிந்து கொள்ள முடியுமா?" என்று
திகைத்த லீகாக், "என் மனைவி சரியான பொருளை
தெரிந்து வைத்திருக்கிறாள். ஆனால் அதை எழுத்தால்
எழுதும் போது தவறாகப் புரிந்து கொண்டு விட்டாள்.
எனக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது" என்றார்.
|
| | |